நாகர்கோவில், நவம்பர் 18 –
குமரி மாவட்டத்தில் வருவாய் துறை ஊழியர்களின் கூட்டமைப்பு ஸ்ட்ரைக் காரணமாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்களின் கூட்டமைப்பு தங்களின் நீண்ட கால கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (18ம் தேதி) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் ஒரு பகுதியாக தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான வருவாய் துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அரசு அலுவலகங்களில் அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
அதிகரித்து வரும் பணிச்சுமைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்குதல், பணியாளர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்தல், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளுக்கு தேவையான போதிய நிதி ஒதுக்கீடு மற்றும் பயிற்சி வழங்குதல், இணையதள சர்வர் பழுதுகளை சரி செய்து தடையற்ற சேவைகளை உறுதி செய்தல், பணிச்சுமை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அடிப்படை வசதிகளும் போதுமான பணியாளர்களும் இன்றி பணி செய்ய வேண்டி உள்ளது. எங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதால் வேறு வழி இன்றி இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், திருவட்டார், விளங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 தாலுகா அலுவலகங்கள், நாகர்கோவில், பத்மநாபபுரம் ஆகிய 2 ஆர்டிஓ அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வருவாய் பிரிவு உள்ளிட்டவற்றில் பணியாளர்கள் வருகை இன்றி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகப் பணிகள் ஒட்டுமொத்தமாக முடங்கியது. இதனால் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளும் பதிக்கப்பட்டுள்ளது.


