மார்த்தாண்டம், நவ. 17 –
குலசேகரம், அரசமொடு பகுதியை சேர்ந்தவர் குஞ்சாலி மரைக்காயர் (67) டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சதிஜியானி (37). அவரது கணவர் நாசர் (47). இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அந்தப் பகுதியில் வசித்து வந்தனர். நாசர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். தற்போது குலசேகரத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். மேலும் மாமனார் குஞ்சாலி மரைக்காயரின் டீ ஸ்டாலில் உதவி செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர்களுக்கு கேரளாவை சேர்ந்தவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது பெயர் அஷ்ரப் என்று கூறி 50 வயது மதிக்கப்பட்ட அந்த நபர் இவர்களின் வீட்டில் வந்து நோய்கள் குறித்த பிரச்சனைகள் குறித்து ஏதோ குறி சொல்வது போன்று சொல்லி வந்துள்ளார். அவர் சொல்லும் வார்த்தைகள் இவர்கள் வாழ்க்கையோடு, வாழ்க்கை பிரச்சினையுடன் ஒத்து போனதால் அந்த நபரை முழுமையாக நம்பி உள்ளனர். நாட்கள் செல்ல செல்ல அந்த நபரின் வார்த்தைகளால் குடும்பத்துக்குள் பிரச்சனைகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் குஞ்சாலி மரைக்காயர் அவரது மகள், அவரது இரண்டு பெண் பிள்ளைகளையும் காணவில்லை. உடனடியாக நாசர் நண்பர்கள் உறவினரிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து நாசர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


