நாகர்கோவில், நவம்பர் 14 –
நாகர்கோவில் அருகே உள்ள தேரேகால்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (28). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவருடன் இதே பகுதியைச் சேர்ந்த உறவினர் இசக்கியப்பன் (28) எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தனர். இவர்கள் நேற்று இரவு வேலை முடிந்து பைக்கில் நாகர்கோவிலில் இருந்து தேரேகால்புதூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அப்டா மார்க்கெட் பகுதியில் தொடங்கும் நான்கு வழிச்சாலையில் செல்லும்போது முன்னால் சென்ற பைக்கை அவர்கள் முந்தி சென்றனர். அப்போது முன்னால் சென்ற பைக்கில் தினேஷ், இசக்கியப்பன் சென்ற பைக் லேசாக உரசியது. இதில் நிலை தடுமாறிய தினேஷ், இசக்கியப்பன் சாலையில் விழுந்தனர்.
திருவனந்தபுரத்திலிருந்து சாத்தூருக்கு காலி அட்டைப்பெட்டி ஏற்றி சென்ற லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு எஸ்.பி. ஸ்டாலின் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடம் வந்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த விபத்தால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யும் பொருட்டு போக்குவரத்து போலீசார் நான்கு வழிச்சாலையில் விபத்து நடந்த சாலையை தவிர்த்து மறுமார்க்க சாலையில் வாகனங்களை திருப்பி அனுப்பி அனுப்பி செய்தனர். இந்த விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


