விளாத்திகுளம், நவம்பர் 14 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில் அமைந்துள்ளார் சுனாமி குடியிருப்பு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் குடிசை அமைத்து பல வருடங்களாக தங்கி வருகின்றனர். அப்பகுதி மக்கள் தங்களுக்கு பட்டா வாங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் பட்டா வழங்காததை கண்டித்தும், மழையினால் தங்களது குடிசைகளுக்குள் மழை நீர் புகுந்து இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி தங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என தற்போது விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தினுள் சுமார் 50க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த வழக்கில் கடந்த 10.09.2025 அன்று நீதிமன்றம் இவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் தற்போது வரை இவர்களுக்கு பட்டா வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தங்களை தற்காலிகமாக நிவாரண முகாம்களில் தங்க வைப்பதோடு, தாங்கள் நிரந்தரமாக பாதுகாப்பான சூழலில் வசிப்பதற்கு தங்கள் பகுதியை சேர்ந்த மக்களுக்கு உடனடியாக இலவசப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மீனவ மக்கள் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகம் வழக்கம்போல இயங்காமல், சற்று பரபரப்பான சூழல் நிலவி வந்தது.



