நாகர்கோவில், நவ. 10 –
நாகர்கோவிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் கடந்த 7-ந்தேதி அமைச்சர் மனோ தங்கராஜ் கருப்பு சட்டை அணிந்து சென்று சிலைக்கு மாலை அணிவித்துள்ளார். கருப்பு சட்டை அணிந்து சென்று காமராஜரை மனோ தங்கராஜ் அவமானப்படுத்தி இருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். காமராஜர் நினைவகத்தை வழிபடும் ஆலயமாக நாங்கள் கருதி வருகிறோம். எனவே காமராஜரை அவமானப்படுத்திய மனோ தங்கராஜை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக
தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜனதா, தி.மு.க. இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. அப்போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை தரவேண்டும் என பா.ஜனதாவிடம் மனோ தங்கராஜ் கேட்டார். ஆனால் அவருக்கு வழங்க தயக்கம் காட்டியது. அப்போது அரசியல் ஆதாயத்திற்காக மனோ தங்கராஜ் பா.ஜனதாவிடம் மன்னிப்பு கேட்டார். தற்பொழுது அரசியல் ஆதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ் சீருடை மற்றும் தொப்பியை கூட அணிய தயங்க மாட்டார்.
காளிமலை கோவிலை வைத்து மறைமுகமாக மனோ தங்கராஜ் கலவரம் செய்ய முயற்சி செய்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக மனோ தங்கராஜ் பேசி வருகிறார். குமரி மாவட்டத்தில் மலைகளை உடைத்து கடத்தலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி குமரி மாவட்டத்தில் அதிகமான செல்வாக்கு பெற வேண்டும் என்றால் மனோ தங்கராஜை ஒதுக்கி வைப்பது நல்லது. திமுக கட்சிக்காரர்களே அவருக்கு எதிராக உள்ளதை தெரிந்து கொள்ள வேண்டும். காந்தி, அண்ணா எம்.ஜி.ஆர்., காமராஜர் நினைவிடங்களில் போராட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது.
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி தலைமை அனுமதித்தால் போட்டியிடுவேன். குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய போராடிய அனைவரையும் கவுரவப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் ஆகும். போதை பொருள் கட்டுப்படுத்துவதில் மாவட்ட போலீஸ் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இன்னும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



