மார்த்தாண்டம், நவ. 10 –
பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்ற மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் 8 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களின் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் அண்மையில் நாகர்கோவிலில் அரசுப் பள்ளியில் நடைபெற்றது.
இதற்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்ற இப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி ஆர்.எம். அக்ஷரா செவ்வியல் இசையில் முதலிடம் பிடித்தார். 12 ஆம் வகுப்பு மாணவி தர்ஷினி காகித கூழ் கழிவுகள் போட்டியில் மூன்றாமிடமும், 12 ஆம் வகுப்பு மாணவி எஸ். ஸ்ருதி செவ்வியல் இசையில் முதலிடமும் பிடித்தனர்.
மேலும் 12 ஆம் வகுப்பு மாணவியர் ஜெஸ்லின் ஜிஜி, சாய்னா, ரேஷ்மா, ஜாய்லின் பிரிசில்லா, டி. ஹெம்சி, ஆர். ரேஷ்மா உள்ளிட்டோர் நாட்டுப்புற நடனம் போட்டியில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர்.
இம்மாணவியரை பள்ளி தலைமையாசிரியை நிர்மலா, ஆசிரியைகள் கிறிஸ்டல் லீலாபாய், பீனா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சசிகலா உள்ளிட்டோர் பாராட்டினர்.



