மார்த்தாண்டம், நவ. 8 –
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் இன்று அதிகாலை லாரிகள் மோதியதில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து கண்டெய்னர் லாரி தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அது போன்று நாகர்கோயில் அருகே இருந்து கனிமவளம் ஏற்றி கொண்டு லாரி திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வரும்போது கனிமவள லாரி முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. அப்பொழுது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இந்த விபத்தால் அதிர்ஷ்டவசமாக பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
மார்த்தாண்டம் போலீசார் வருகை தந்து வாகனங்களை மேம்பாலத்தின் கீழ் பகுதியாக வழியாக திருப்பி விட்டனர். சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு இந்த இரண்டு லாரிகளும் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.



