நாகர்கோவில், அக்டோபர் 31 –
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அக்டோபர் 27ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை நமது பகிரப்பட்ட பொறுப்பு என்ற கருப்பொருளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் www.cvc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது உறுதிமொழியை பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தினை சிறப்பிக்கும் விதமாக குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இன்று ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நாகர்கோவிலில் உள்ள எஸ்எல்பி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நிறைவடைந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மரிய பாக்கியசீலன் மற்றும் ஆசிரியர்கள், லஞ்ச ஒழிப்பு போலீசார் இதில் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.


