நாகர்கோவில், அக்டோபர் 28 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜாண் லூயிஸ், கலெக்டர் அழகுமீனா தலைமையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் அதிகளவு மழை பொழிவதால் பேச்சுப்பறை பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சுப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று 43.37 அடியாகவும், நீர்வரத்து 611 கன அடியாகவும், உபரி நீர் வெளியேற்றம் 2049 கன அடியாகவும் உள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது மழை பெய்து வருவதால் அணையின் அளவினை கண்காணித்து உபரி நீரினை படிபடியாக திறந்து விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உபரி நீர் வெளியேற்றுவதற்கு முன்பாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன் எச்சரிக்கை வழங்க வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 52.70 லட்சம் மதிப்பில் 2.20 கிலோ மீட்டர் நீளத்திற்கு மணியன்குழி முதல் மணலோடை வரை சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சாலையின் தரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து தாயுமானவர் திட்டத்தின் கீழ் மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 5 லட்சம் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது.
ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மன மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் போன்ற சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றார்.


