இரணியல், அக். 13 –
புத்தளம் அருகே உள்ள தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (45). மரவேலை செய்து வருகிறார். இவரது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் இறச்சகுளம் சாலை, களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். நேற்று முன்தினம் மாலை மனைவியையும் ஒன்றரை வயது குழந்தையையும் அங்கு விட்டு விட்டு டீ குடிப்பதற்காக மறுபடியும் பைக்கில் புறப்பட்டார். இறச்சகுளம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று மகேஷ் பைக்கில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் நிற்காத கார் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் பைக் உடன் மகேசை இழுத்துச் சென்றது. இந்த சம்பவத்தில் பைக்கில் சென்ற மகேஷ் உடல் சிதைந்து பலியானார்.
தகவல் அறிந்து இரணியல் போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் சுங்கான்கடை பகுதியை சேர்ந்த சொர்ணப்பன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். இதற்கு இடையே மகேசை சொர்ணப்பன் காரை ஏற்றி கொலை செய்துவிட்டதாக உறவினர் குற்றம் சாட்டியுள்ளனர். கார் டிரைவர் அலட்சியம் தான் இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.


