திருப்பத்தூர், செப். 27 –
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் சிவ செளந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேசினர்.
இந்த கூட்டத்தில் சிம்மணபுதூர் ஊராட்சி கோடியூர் கிராமத்திற்கு செல்லும் பொது வழியை ஆக்ரமிப்பு செய்து கந்திலி ஒன்றிய நிர்வாகம் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகத்தை கட்டி உள்ளதால் போதிய சாலை வசதி இல்லாமல் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியாக தற்போது சென்று வருவதாகவும் மேலும் அந்த நிலத்தில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி ஆறு போல் காட்சி அளிப்பதால் அவ்வழியாக பொதுமக்கள் சென்று வர போர்க்கால அடிப்படையில் படகு போக்குவரத்து வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் இருப்பில் உள்ள காலாவதியான இரசாயன உரங்களை திரும்ப பெற வேண்டும், உதயேந்திரம் ஏரிக்கு பாலாற்றில் இருந்து வரும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உங்கள் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குநர் அப்துல் ரகுமான் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



