திருப்பத்தூர், ஆக. 5 –
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் நடைபெற்ற உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழாவில், உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தினை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் மாவட்ட அளவிலான முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். இவ்விழாவில் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் தெரிவித்ததாவது: உலகம் முழுவதும் வர்த்தக முறைகள் காலத்திற்கேற்ப தொடர்ந்து மாறிவருகின்றன. ஆரம்ப காலங்களில் நேரடி வர்த்தகம் நடைமுறையில் இருந்த நிலையில், தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இணையவழி மற்றும் கைப்பேசி செயலிகள் மூலம் பொருட்கள் வாங்கும் நடைமுறை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நுகர்வோரின் நலனை பாதுகாக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களும் காலத்திற்கேற்ப திருத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு பல்வேறு பாதுகாப்புச் சட்டங்களையும். உரிமைகளையும் உருவாக்கியிருந்தாலும், அவை பொதுமக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டுமெனில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியம். குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம் சமூகத்தில் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
பொதுமக்கள் தங்களது உரிமைகள் மற்றும் சட்டப்பாதுகாப்புகள் குறித்து அறிந்திருந்தால்தான் ஏமாற்றும் வர்த்தக நடைமுறைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். இல்லையெனில், நேர்மையற்ற வணிக நடைமுறைகள் தொடரும் அபாயம் உள்ளது. இன்றைய தினம் துறை சார்ந்த அலுவலர்கள் நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும், தற்போது நடைபெற்று வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்குச் சென்று, இந்நிகழ்வில் விவாதிக்கப்பட்ட நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து சக மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். இதன் மூலம் அனைத்து மாணவர்களிடமும் நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பரவலாக ஏற்படும்.
எனவே, உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா போன்ற நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு, பொதுமக்களிடையே நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், முதுநிலை மண்டல மேலாளர் ஜெயம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன், துணைப்பதிவாளர் (பொ.வி.தி) ஆ.இளங்கோவன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. நா. கலு சிவலிங்கம், தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் முருகன், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரபாகரன், தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ஏகாம்பரம், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு உறுப்பினர் விஜயராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



