சுசீந்திரம், செப். 27 –
குமரி மாவட்டம், தேரூரில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பிறந்தார் (1876). 5வது வயதில் தேரூர் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 9-வது வயதில் தந்தையை இழந்தார். திருவாவடுதுறை மடத் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். எம்.ஏ. பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் பயின்றார். கோட்டாறு, நாகர்கோவில் பாடசாலைகளில் ஆசிரியராக பணியாற்றினார்.
திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். சுமார் 36 ஆண்டுகள் கல்விப் பணியாற்றினார். இவரது இலக்கிய வெளிப்பாட்டில் ஒரு அறிவியல் கண்ணோட்டம் பிரதிபலித்தது. நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். சுதந்திர போராட்டத்தில் காந்தியத்துக்கு ஆதரவாகக் கவிதைகளை எழுதியதால் ‘கவிமணி’ எனவும் போற்றப்பட்டார்.
ஆங்கிலத்தில் உள்ளதுபோல தமிழில் குழந்தைப் பாடல்கள் இல்லையே என்று பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் பாடினார். இதனால் தமிழ்நாட்டிற்கு சிறந்த கவிஞராக திகழ்ந்தார். இவரது நினைவு நாளில் சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருஉருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கந்தசாமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வ லேட் சுஷ்மா, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, துணைத் தலைவர் சுப்ரமணிய பிள்ளை, வருவாய் ஆய்வாளர் பிரேம கீதா, கிராம நிர்வாக அலுவலர் வளர்மதி மற்றும் பேரூராட்சி உறுப்பினர் காசி உட்பட பல கலந்து கொண்டனர். அது போல் அவர் பிறந்த தேரூரில் அவர் நினைவிடத்தில் இளைஞர்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



