கன்னியாகுமரி, செப். 15 –
இஸ்ரோ தலைவர் நாராயணன் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரி வந்தார். பூம்புகார் படகு துறையிலிருந்து தனி படகு மூலம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்றார். அங்கிருந்து கண்ணாடி இழை கூண்டு பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்: 10 ஆயிரத்தி 360 கோடி ரூபாய் செலவில் கடந்த ஜூலை மாதத்தில் நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து இந்தியாவில் உருவான சேட்டிலைட் விண்ணில் ஏவப்பட்டது.
இதன் மூலம் ஆண்டின் 365 நாளும் துல்லியமாக செயல்பட்டு 12 நாளுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வந்து கண்காணித்து பேரிடர் , கால நிலை போன்ற தகவல்கள் அனுப்ப முடியும் இது இந்திய மக்களுக்கு பெருமிதமான தருணம் இன்னும் 60 நாட்களில் இந்த செயற்கை கோள் அனுப்பும் தகவல்கள் பொதுமக்கள் பயன்படும் விதத்தில் அனைவருக்கும் வழங்கப்படும். இந்திய மக்களை பாதுகாக்கவும் இஸ்ரோ உதவி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் சுமார் 25 செயற்கைக்கோள்கள் சிறப்பாக, துல்லியமாக செயல்பட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்பான விசயம் என்பதால் கூடுதல் தகவல்கள் என்னால் சொல்ல முடியாது.
2300 ஏக்கர் நிலம் தமிழக அரசின் முயற்சியோடு இஸ்ரோ பெற்றுள்ளது. 1000 கோடி ரூபாய் செலவில் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவு தளம் விரைவில் அமைய உள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலம் வித்தியாசமாக நன்றாக உள்ளது. தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது. அவர்களுக்கு பாராட்டுகள் என கூறினார்.



