நாகர்கோவில், செப். 12 –
ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூவன்குடியிருப்பு பகுதியில் சம்பகுளம் உள்ளது. சம்பவ தினம் குளத்தில் தலை இல்லாத நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பென்சியா பிரைட் என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, உடனடியாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிராம அலுவலரின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலை இல்லாத நிலையில் காணப்பட்ட குழந்தை சுமார் 1 மாத குழந்தை என தெரிய வருகிறது. தலையை துண்டித்து குழந்தையை கொலை செய்து வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே குழந்தை நரபலிக்காக தலை துண்டிக்கப்பட்டதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது குறித்து ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


