சென்னை, பிப். 17 –
2024-ஆம் ஆண்டில் வெளியான மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் சிறந்த திறமைகளையும் கலைத் திறனையும் கௌரவிக்கும் வகையில், கேரளா சுற்றுலாத் துறையுடன் இணைந்து வழங்கப்படும் 70-ஆவது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளுக்கான பரிந்துரைகளை ஃபிலிம்பேர் நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்விருது வழங்கும் விழா 2026 பிப்ரவரி 21 அன்று கொச்சியில் உள்ள அட்லக்ஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை அமரன் திரைப்படம் 10 பரிந்துரைகளுடன் முன்னணியில் இருக்க அதனைத் தொடர்ந்து லப்பர் பந்து மற்றும் மெய்யழகன் ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. சிறந்த முதன்மை நடிகருக்கான பிரிவில் அரவிந்த் சாமி, அட்டகத்தி தினேஷ், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சிறந்த முதன்மை நடிகைக்கான பிரிவில் சாய் பல்லவி, அன்னா பென், கீர்த்தி சுரேஷ், சிம்ரன், ஸ்ரீ கௌரி பிரியா மற்றும் ஊர்வசி ஆகியோர் பரிந்துரைப் பட்டியலில் உள்ளனர்.
மலையாளத்தில் ஆடுஜீவிதம் திரைப்படம் 8 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் ஆட்டம், ஆவேசம், பிரமயுகம், மஞ்சுமெல் பாய்ஸ், ஆடுஜீவிதம், பிரேமலு, உள்ளொழுக்கு, கிஷ்கிந்தா காண்டம் மற்றும் பிரபாயை நினச்சதெல்லாம் ஆகிய படங்கள் போட்டியிடுகின்றன.
சிறந்த நடிகருக்கான பிரிவில் மம்மூட்டி, பகத் பாசில், பிருத்விராஜ், டோவினோ தாமஸ், ஆசிப் அலி மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இது சிறந்த ஆண் கதாபாத்திரங்கள் நிறைந்த ஒரு ஆண்டாக அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதே போல் சிறந்த நடிகைக்கான பிரிவில் மமிதா பைஜு, பார்வதி திருவோது, ஊர்வசி, நஸ்ரியா நசீம், திவ்யாபிரபா, கனி குஸ்ருதி மற்றும் ஜரின் ஷிகாப் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், இது பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட சிறந்த நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது. அதேபோல் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களுக்கும் பிபிலிப்ஃபேர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இவ்விருதுகள் குறித்து கேரள அரசின் பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. பி.ஏ. முகமது ரியாஸ் கூறுகையில், “தென்னிந்தியத் திரையுலகின் சிறப்பைக் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க 70-ஆவது ஃபிலிம்பேர் விருதுகள் தெற்கு விழாவை நடத்துவதில் கேரளா பெருமிதம் கொள்கிறது. பிரமிக்க வைக்கும் இயற்கை நிலப்பரப்புகள், வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் கதை சொல்லும் கலையுடன் கொண்டுள்ள ஆழமான பிணைப்பு ஆகியவற்றால், எமது மாநிலம் நீண்டகாலமாகத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குப் பிடித்தமான இடமாக இருந்து வருகிறது. ஃபிலிம்பேர் விருதுகளை நடத்துவது சினிமாவுடனான கேரளாவின் நீடித்த உறவைப் பிரதிபலிப்பதோடு, திரைப்பட சுற்றுலா மற்றும் ஆக்கப்பூர்வமான பரிமாற்றங்களுக்கான துடிப்பான மையமாக மாநிலத்தை மேம்படுத்தும்” என்று தெரிவித்தார்.


