திருவண்ணாமலை, ஜூலை 30 –
கடன் தள்ளுபடி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எமதர்மன் வேடமிட்டு தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
திருவண்ணாமலை அடுத்த வெறையூர் மத்திய கூட்டுறவு வங்கி கிளை முன்பு இன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் அ. எ. கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ரா.சுப்பிரமணி, மாநிலத் துணைத் தலைவர் சா. சந்தியாகு, மாநில செயலாளர் பா.ஜெயராமன், மாநில பொது குழு உறுப்பினர் மா.ராமசாமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தி.தங்கராஜ், ரா.வெங்கடேசன், இரா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் அ. இளங்கோ வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தை சங்கத்தின் மாநிலத் தலைவர் முத்தகரம் பழனிசாமி துவக்கி வைத்தார். தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் சிறு குறு மற்றும் பெரு விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய இடுபொருட்களின் விலையை குறைக்க வேண்டும், நெல் குவிண்டாலுக்கு 4 ஆயிரம் ரூபாயும், கரும்பு டன்னுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும், வெறையூர் பகுதியில் தீ அணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், வெறையூர் மற்றும் தி.வாளவெட்டி இடையில் துரிஞ்சல் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 2 விவசாயிகள் எமதர்மன், சித்திரகுப்தன் வேடமிட்டு விவசாயிகள் படும் வேதனைகளை நாடகம் மூலம் வெளிப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது.
முடிவில் ஒன்றிய அமைப்பாளர் ஆ.சக்திவேல் நன்றி கூறினார்.



