ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தில்
640 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
நாகர்கோவில், மே 30:
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, செயின் பறிப்பு, அடிதடி மற்றும் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை கண்டறிதல் போன்றவற்றை தடுக்க எஸ்.பி., ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து விரைந்து கைது செய்ய கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் உதவிகரமாக உள்ளன.
வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த காவல்துறை அறிவுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நாகர்கோவிலில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் 6 மணி நேரத்தில் கொலையாளி கண்காணிப்பு கேமரா உதவியுடன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு, கோஷ்டி மோதல் மட்டுமின்றி கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை போன்ற சமூக விரோத செயல்களை தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு இருக்கும் வகையில் ‘ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிராமப் பகுதிகள் மற்றும் மாநகர பகுதிகளிலும் கிராமம் மற்றும் மாநகர வார்டுகள் வாரியாக ஒரு காவலர், இரு கண்காணிப்பு கேமராக்கள் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமம் மற்றும் வார்டின் பிரதான மற்றும் குற்ற நிகழ்வுகள் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து காவலர் அந்தந்த கிராமம், வார்டு பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த காவலர்கள் அவர்கள் பகுதியில் சமுதாய விழாக்கள், வழிபாட்டு தல நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களுடன் சமூக உறவில் இருப்பார். இதன் மூலம் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கும் தகவல்கள் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, சமூக விரோத செயல்கள் தடுப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது கிராமங்கள் மற்றும் வார்டு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. குமரியில் உள்ள 37 காவல் நிலையங்கள் மூலம் சுமார் 320 கிராமங்களில் இதுவரை 640 கண்காணிப்பு கேமராக்கள் காவல்துறையால் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. எஸ்.பி., ஸ்டாலினின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.