குளச்சல், ஏப்-10.
மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் வெல்லிங்டன் மனைவி ஜெசிமா (47) இவரது குடும்பத்தினருக்கும் அதே பகுதி சேர்ந்த ஜட்சன் பிரபாகரன் (29) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
நேற்று மாலை ஜெசிமா தனது உறவினரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஜாட்சன் பிரபாகர் தரப்பினர் ஜெசிமாவோடு தகராறு செய்து அவரது வீட்டு ஜன்னலை உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் ஜெசிமா தரப்பினரும் ஜாட்சன் பிரபாகரன் தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் காயம் அடைந்த ஜெசிமா குளச்சல் அரசு ஆஸ்பத்திரியிலும், ஜாட்சன் பிரபாகரன் மனைவி ஷாரோன் சுதிமோள் (28) மற்றும் ஜாக்சன் ஆகியோர் குமரிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஜெசிமா மற்றும் ஷாரோன் சுதிமோள் ஆகியோர் தனித்தனியாக மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி இருதரப்பையும் சேர்ந்த கிளிட்டஸ், சகாய சிந்துஜா மற்றும் 14 வயது சிறுவன் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.