நாகர்கோவில், ஜூன் 4:
குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்கும் வகையில் எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் ஒரே நாளில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். நாள்தோறும் கஞ்சா வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஐந்து மாதங்களில் 131 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 256 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 106 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து உள்ளனர். கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அதைத் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் போதைக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்களை நடத்தவும் காவல்துறையினருக்கு எஸ்.பி., அறிவுரை வழங்கி உள்ளார்.