நாகர்கோவில், ஜூன் 12 –
குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட அரசுப்பள்ளிகளில் பயின்று 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் மேற்படிப்பு மேற்கொள்வது குறித்த காஃபி வித் கலெக்டர் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்து கொண்டு, மாணவ மாணவியர்களிடையே கலந்துரையாடி பேசியதாவது: அரசுப்பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்தகட்டமாக என்னென்ன உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதை நீங்களாகவே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஒவ்வொரு மாணவ மாணவியர்களும் மருத்துவம், பொறியியல், செவிலியர்கள், வணிகவியல், கணினி, அரசியல் அறிவியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் சார்ந்த பாடங்கள் உள்ளிட்ட பல்வேறு பாடத்திட்டங்களை தேர்வு செய்து பயின்று, ஒரு நல்ல மருத்துவராக, பொறியாளர்களாக, விமானம் ஒட்டுபவர்களாக, வேளாண் விஞ்ஞானிகளாக ஆக வேண்டுமென்ற என்ற உங்களின் உயர்ந்த எண்ணங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டீர்கள்.
பள்ளி படிப்பு வாழ்க்கையின் ஒரு கட்டம் தான். அடுத்த கட்டத்தை தீர்மானிப்பது மேற்படிப்பு தான் என்பதை உணர்ந்து கல்வி கற்க வேண்டும். என்னுடைய பள்ளி படிப்பு காலக்கட்டத்தில் நான் ஒரு விஞ்ஞானியாக ஆக வேண்டும். பேராசிரியராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால் என்னுடைய அருகாமையில் உள்ள கிராமங்களில் உள்ளாட்சி தேர்தல்களில் சாதி கட்டமைப்பு ஒரு தடையாக இருப்பதை பார்த்து, இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்து, அடித்தட்டு மக்களுக்காக பணியாற்ற வேண்டுமென்ற நோக்கில், விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புடனும் தேர்வினை எதிர்கொண்டு வெற்றிபெற்று உங்களிடையே ஆட்சியராக பேசுகிறேன்.
சிறு வயதிலிருந்தே எனக்கு பத்திரிக்கை படிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. படிப்பதோடு மட்டுமின்றி நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகளையும், பொது அறிவையும் நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக நகர்ப்புறங்களில் படித்தவர்கள் போன்று ஆங்கில புலமை நமக்கு இல்லையே உள்ளிட்ட பல்வேறு சூழல்கள் ஏற்படும் போது அவற்றையெல்லாம் பொருட்படுத்தமால், வாழ்வில் உயர்நிலையை பெற்று நம் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் திகழ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பள்ளிக்கல்வி) சாரதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சியூஸ், உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், மாணவ மாணவியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



