சேலம், ஜூன் 21 –
சேலம் அரியானூர் பகுதியில் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவன நிகர் நிலை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா ஆண்டு மற்றும் 11 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.கே.சுதீர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். விநாயகர் மிஷன் பல் மருத்துவ கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி அரியானூர் சீரகாபாடி வழியாக விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் யோகா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இணை வேந்தர் சபரிநாதன், பல்கலைக்கழகப் பதிவாளர் நாகப்பன், பல்கலைக்கழக இயக்குனர்கள், அலுவலர்கள் மாணவ, மாணவிகள், என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.