நாகர்கோவில், ஆக. 09 –
நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் 24×7 அஞ்சல் முன்பதிவு வசதி 11.08.2025 முதல் முழு நாளும் முழு இரவும் சேவை வழங்கப் போவதாக கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அஞ்சல் துறை வாடிக்கையாளர் சேவையை மேலும் உயர்த்தும் நோக்கில் நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. வரும் 11.08.2025 முதல், பதிவு (Registered) / விரைவு (Speed Post) / பார்சல் (Parcel) தபால்களுக்கு 24×7 முன்பதிவு வசதி வழங்கப்படுகிறது.
இந்த புதிய வசதி மூலம் மக்களுக்கு எந்த நேரத்திலும் பகல், இரவு, விடுமுறை, ஞாயிறு என எல்லா நாட்களிலும் தபால் சேவையை பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. தினந்தோறும் மூன்று ஷிப்ட் அடிப்படையில் கவுண்டர் சேவை செயல்படும்.
வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் தபால் சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இது சிறிய கடைகளில் இருந்து வணிக நிறுவனங்கள் வரை அனைவருக்கும் மிகுந்த நன்மையை வழங்கும். முழுமையாக சீரமைக்கப்பட்ட முன்பதிவு கவுண்டர் வசதி, மின்னணு எடை அளவி, தபால் தலைகள், க்யூ ஆர் மூலம் பணம் செலுத்தும் வசதி, பேக்கிங் வசதி மற்றும் தேவையான அனைத்து படிவங்களும் ஒரே இடத்தில் கிடைக்க பெறும்.
இதற்காக பணியமர்த்தப்படும் ஊழியர்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச அஞ்சல் முன்பதிவு, அளவீட்டு எடைகள் உள்ளிட்ட அனைத்திலும் நன்கு பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள். மெயில் வேன் மூலமாக தினசரி நான்கு முறை காலை 04:20, பிற்பகல் 15:45, மாலை 18:20, இரவு 20:15 முன்பதிவான பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.
அஞ்சல் துறை – மக்கள் சேவையின் முன்னணி முகம்!
இந்த புதிய 24×7 சேவையால் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதி மக்கள், வணிகர்கள், நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் தொலைதூரத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு தபால் அனுப்பும் வசதி மேலும் எளிமையாகும். இந்த புதிய முயற்சி, இந்திய அஞ்சல் துறையின் சேவை, வாடிக்கையாளர் கண்ணோட்டம் மற்றும் தொழில்நுட்ப வசதி ஆகியவற்றின் மிகச் சிறந்த முன் உதாரணமாக திகழ்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.