கட்டிக்கானபள்ளி பஞ்சாயத்து தலைவர் காயத்ரிதேவி கோவிந்தராஜ் தூய்மை பணியாளர்கள், ஊழியர்களுக்கு பணி நிறைவு விழாவில் பொங்கல் பரிசுகள் வழங்கி, கண்ணீருடன் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். கிருஷ்ணகிரி நகராட்சி ஒட்டி உள்ளது கட்டிக்கானபள்ளி பஞ்சாயத்து. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 5ம் தேதி முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இந்த பஞ்சாயத்தை நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள நிலையில் பணி நிறைவு பெற்ற கட்டிக்கான பள்ளி பஞ்சாயத்து தலைவர் காயத்ரி கோவிந்தராஜ் தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சேலை, லுங்கி, போர்வை, குடை, டிராவல் பேக், உடன் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொங்கல் பரிசுகளை வழங்கினார். கிருஷ்ணகிரி பி.டி.ஓ சிவப்பிரகாசம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அப்போது பரிசு பொருட்களை வழங்கி பேசிய காயத்ரி கோவிந்தராஜ் இதுவரை ஒத்துழைப்பு அளித்த அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி எனக்கூறி தேம்பித் தேம்பி அழுதார். அதை பார்த்த தூய்மை பணியாளர்களும் அவருடன் சேர்ந்து அழுதனர். இதனால் அந்தப் பகுதியே சிறிது நேரம் சோகத்தில் ஆழ்ந்தது. அவர்களிடம் பேசிய பஞ்சாயத்து தலைவர் காயத்ரி கோவிந்தராஜ், பணி நிறைவடைந்தாலும் நீங்கள் அனைவரும் என்னை எப்போதும் போல சந்தித்து உதவிகளை கேட்கலாம் என்றும், கடந்த ஆண்டுகளில் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது போல, வரும் காலங்களிலும் கட்டிக்கான பள்ளி பகுதியை நல்ல முறையிலும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து தேவசமுத்திரம் அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு போர்வை மற்றும் டிபன் பாக்ஸ் வழங்கினார்கள். கிருஷ்ணகிரி துணை பிடிஓ ராஜு மற்றும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், ஊழியர்கள், உட்பட ஏராளமானோர் இந்தப் பணி நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.



