நாகர்கோவில் ஏப் 18
கன்னியாகுமரியில் தபால் நிலையங்கள் மூலமாக ஒரு ஆண்டில் 1.75 லட்சம் பேர் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் மேற்கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மத்திய அரசின் அஞ்சல்துறை சார்பில், தபால் பட்டுவாடா சேவை மட்டுமின்றி தபால் வங்கி சேவை, சேமிப்பு கணக்கு சேவை, பார்சல் சேவை போன்ற பல்வேறு சேவைகள் செயல்படுத்தப்படுகிறது. இதுதவிர அனைத்து முக்கியமான தபால் நிலையங்களிலும் மேலும் ஆதார் பதிவு மற்றும் பாஸ்போர்ட் சேவைகளையும் தபால்துறை செயல்படுத்தி வருகிறது.
இதுதவிர இந்தியா முழுவதம் தபால் நிலையங்களில் புதிதாக ஆதார் கார்டு பதிவுக்கான பணிகளையும், ஆதாரில் கைவிரல் ரேகைகள், கருவிழிகளை புதுப்பிக்கும் பணியும், ஆதாரில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் போன்ற திருத்தப்பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.இதற்கு ஒவ்வொரு தபால் நிலையங்களில் டோக்கன் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவில் மட்டுமே ஆதாரில் திருத்தம் செய்ய மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதேநேரம் மாவட்ட தலைமை தபால் நிலையங்களில் மட்டும் நீண்ட நேரம் ஆதார் திருத்தம், புதிய ஆதார் சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில தபால் நிலையங்களில் ஆதார் சேவை தொடர்பான தகவல்களை பார்ப்போம்.
இதுபற்றி கன்னியாகுமரி கோட்ட தபால் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், கல்லூரி சேர்க்கைக்காக மாணவர்களின் ஆதார் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளதா? என்று இப்போது சரிபார்க்கப்படுகிறது. ஆதாரில் இருக்கும் கைரேகை மற்றும் கருவிழி தகவல்களை மாணவர்கள் புதுப்பித்துக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது. உயர் கல்வி சேர்க்கையின் போது தேவையற்ற கால தாமதத்தைத் தவிர்க்கவும், பள்ளி மாணவர்களின் வசதிக்காகவும்,நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையத்தின் செயல்பாட்டு நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.அதிகரித்து வரும் ஆதார் சேவையின் தேவையினைக் கருத்தில் கொண்டு அனைத்து தபால் நிலையங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக கோட்டார், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம், ஆரல்வாய்மொழி, நெய்யூர், நாகர்கோவில் கோணம் தொழிற்பேட்டை, அழகப்பபுரம், மார்த்தாண்டம், வடிவீஸ்வரம், அழகியபாண்டியபுரம், குழித்துறை, அருமனை, பூதப்பாண்டி, குளச்சல், கொல்லங்கோடு, ஈத்தாமொழி, கன்னியாகுமரி, மேக்காமண்டபம், கொட்டாரம், சுசீந்திரம், முளகுமூடு, மணவாளக்குறிச்சி, வெட்டூர்ணிமடம், புதுக்கடை, திக்கணங்கோடு, களியக்காவிளை, ஆசாரிபள்ளம், இடைக்கோடு, கருங்கல், பாலப்பள்ளம், காப்புகாடு, குலசேகரம், புத்தளம், காட்டாத்துறை, திருவட்டார், பள்ளியாடி, பளுகல், எஸ்.டி. மங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதார் தொடர்பாக சிறப்பு ஆதார் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி- கல்லூரிகளில், கிராமப்புறங்களில், வார்டு பகுதிகளில் ஆதார் சிறப்பு நடத்த வேண்டும் என்று விரும்பினாலும் ஏற்பாடுகள் செய்யது வருகிறோம். அந்த வகையில் கடந்த நிதி ஆண்டில் கன்னியாகுமரி மாவட்ட தபால் நிலையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகளை 1 லட்சத்து 79 ஆயிரத்து 336 பேர் பெற்று பயன் அடைந்துள்ளனர். இதேபோல் புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் சேவையின் மூலம் 18 ஆயிரத்து 484 பயனாளிகளும் பயன் பெற்றுள்ளனர். மேலும் தபால் ஏற்றுமதி மையத்தின் சேவைகளை 12 சிறு, குறு தொழில் முனைவோர் பயன்படுத்தி இருக்கிறார்கள்” என்றார்.