தேனி, செப். 18 –
வைகை அணையிலிருந்து ஒருபோக பாசனத்திற்கு தண்ணீரை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன்குமார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப்பகுதியில் ஒரு போக பாசனப் பரப்பாகிய 85,563 ஏக்கர் நிலங்களுக்கு மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப் பரப்பாகிய 19,439 நிலங்களுக்கு ஆக மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 1,130 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் இன்று முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 8,493 மில்லியன் கன அடி நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 53 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 5,697 ஏக்கர் நிலங்களும், மதுரை வடக்கு வட்டத்திற்குட்பட்ட 24,811 ஏக்கர் நிலங்களும், மேலூர் வட்டத்திற்குட்பட்ட 48,963 ஏக்கர் நிலங்களும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட 478 ஏக்கர் நிலங்களும், சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட 5,561 ஏக்கர் நிலங்களும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 146 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 1,201 ஏக்கர் நிலங்களும், உசிலம்பட்டி வட்டத்திற்குட்பட்ட 13,723 ஏக்கர் நிலங்களும், திருமங்கலம் வட்டத்திற்குட்பட்ட 3,982 ஏக்கர் நிலங்களும், பேரையுர் வட்டத்திற்குட்பட்ட 387 ஏக்கர் நிலங்களுக்கும், என மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எனவே, மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சார்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் இந்நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர்மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் செயற்பொறியாளர் சிவபிரபாகரன், உதவி செயற்பொறியாளர்கள் சேகரன், முருகேசன், குபேந்திரன், வட்டாட்சியர் மருதுபாண்டி மற்றும் விவசாயி சங்கங்களின் பிரநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



