தென்காசி, ஜூலை 19 –
தென்காசி மாவட்டம் செங்கோட்டை முத்துச்சாமி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் சுதந்திர போரட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் 139-வது பிறந்தநாள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் ஆகியோர் சுதந்திர போரட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்குவகித்தவர் வீர வாஞ்சிநாதன்.
1911-ம் ஆண்டு ஜுன் 17-ம் தேதி நெல்லை ஆட்சியராக இருந்த ராபர்ட்ஆஷ்துரை என்பவரை மணியாச்சி இரயில்வே நிலையத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அதன் பிறகு அதே துப்பாக்கியால் தன்னையும் மாய்த்துக்கொண்டார். ஆகையால் அவரின் சுதந்திரப் போராட்ட ஈடுபாட்டை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜுலை 17-ம் தேதியில் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டவும், ஜுன் 17-ம் தேதி நினைவு நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதற்கிணங்க செய்திமக்கள் தொடர்புத்துறையின் மூலம் ஆண்டுதோறும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை முத்துச்சாமி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர்மன்ற தலைவர் ராமலெட்சுமி, செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், வாஞ்சிநாதனின் வாரிசு ஹரிஹர சுப்பிரமணியன் குடும்பத்தினர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.