விளாத்திகுளம், செப்டம்பர் 22 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு விஸ்வகர்மா சமுதாய மக்கள் சார்பில் பெண்கள் கலந்து கொண்ட மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதை முன்னிட்டு விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் முன்பு விஸ்வகர்மா திருவுருவப்படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து மா விளக்கு பூஜை நடைபெற்றது. கோவில் முன்பு தொடங்கி தாலுகா அலுவலகம், பேருந்து நிலையம், மதுரை சாலை, நான்கு ரத வீதி வழியாக மேளதாளம் முழங்க மற்றும் வாண வேடிக்கைகளுடன் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: நடிகர் விஜய் மட்டுமல்ல யார் வந்தாலும் அதிமுக, இரட்டை இலைக்கு விழக்கூடிய வாக்கு அதிமுகவிற்கு தான் விழும். 2026ல் திமுக ஆட்சிக்கு வரும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் நம்பிக்கையுடன் இருப்பார். ஆனால் சூழ்நிலை திமுகவிற்கு எதிராக இருக்கிறது. அதிமுக வெல்ல போகிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரப்போகிறார். 2-வது இடத்திற்கு திமுக, தவெக போட்டி போடுகிறார்கள்.
அதிமுக பரிபூரணமாக எடப்பாடி பழனிச்சாமி கையில் உள்ளது. இரட்டை இலையும் அவர் கையில் உள்ளது. அதிமுக தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. வேலையும் செய்ய தொடங்கியாச்சு. 2026 தேர்தலில் அதிமுக வெல்ல போகிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரப்போகிறார். 2,3-வது இடத்திற்கு தான் திமுக, த.வெ.க, சீமான் (நாம் தமிழர் கட்சி) ஆகியோர் போட்டி போடுகின்றனர். அதிமுகவுக்கு நிலையான இடத்தை அளிப்பதற்கு தயாராகி விட்டனர். அதிமுக, பாஜக கூட்டணி தான் 2026 சட்டமன்ற தேர்தலில் வெல்லும் என்றார்.



