மார்த்தாண்டம், செப். 8 –
விரிகோடு ரயில்வே மேம்பாலத்தை தற்போதைய சாலையில் அமைக்க வலியுறுத்தி மா. கம்யூ. சார்பில் விரிகோடு ஜங்ஷனில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. மார்த்தாண்டத்தில் இருந்து விரிகோடு வழியாக கருங்கலுக்கு ரோடு உள்ளது விரிகோடு ஜங்ஷனில் ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்தப் பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என விரிகோடு மற்றும் சுற்றுவட்டார மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் புதிய பாதையில் மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
புதிய பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வழிவகை செய்யும் இரண்டு அரசாணைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், விரிகோடு மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தியும், விரிகோடு ரயில்வே மேம்பாலத்தை தற்போதைய சாலையின் அமைக்க வலியுறுத்தியும் மா. கம்யூ. நல்லூர் வட்டாரக்குழு சார்பில் விரிகோடு ஜங்ஷனில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது.
நல்லூர் வட்டார செயலாளர் ஜஸ்டின் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்எல்ஏ லீமா ரோஸ், முன்னாள் எம்பி பெல்லார்மின், தங்க மோகன், நீலாம்பரன் ஆகியோர் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நிறைவுரையாற்றினார்.



