ராமநாதபுரம், அக். 4 –
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகள் வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமுமுக சார்பில் நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்து மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபெற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னதாக அவர் பேசும் போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ராமநாதபுரம் நகராட்சியில் ரூபாய் 30 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழி சாலையில் இருந்து ஆறு வழிச்சாலையாக மாற்றப்படும். திருவாடானை மற்றும் ஆர்எஸ் மங்கலம் பகுதியில் 16 கண்மாய்கள் ரூபாய் 18 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட ஒன்பது அறிவிப்புகளை வெளியிட்டதற்கும் மதுரை உயர் நீதிமன்ற வழக்கு உத்தரவின் அடிப்படையில் தொண்டி புதிய நூல் நிலையம் கட்டிடம் திறந்ததற்கும் தமுமுகவின் சார்பில் நன்றியை தெரிவித்து வாழ்த்தி வரவேற்கிறோம். அத்துடன் நீண்ட நாளாக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள தொண்டி செய்யது முகம்மது அரசு பள்ளி மைதானத்தை தொகுதிக்கு ஒரு ஸ்டேடியம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் உறுதி அளித்தீர்கள் அதனடிப்படையில் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை அடிப்படையில் தொண்டி யில் ஸ்டேடியம் அமைத்து தரவேண்டும் மேலும் தேர்தல் வாக்குறுதியாக தொண்டி அரசு மருத்துவமனை மேம்படுத்தி தரப்படும் என சொன்னீர்கள்.
ஏற்கனவே தேர்தல் அறிவிப்பில் வெளியிட்ட இந்த இரண்டு கோரிக்கைகளையும் நீண்ட நாட்களுக்கு முன்பு தொண்டியில் மினி துறைமுகம் அமைப்பதற்காக தொண்டி முஸ்லிம் கல்வி சார்பில் மக்கள் சார்பில் 25 ஏக்கர் நிலம் அரசுக்கு தானமாக வழங்கியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அந்த இடங்களில் சரியான பாதுகாப்பு இல்லாமல் அந்த இடம் இருக்கிறது. எனவே தமிழக அரசு முயற்சி எடுத்து துறைமுகபட்டினமாக விளங்கிய தொண்டியில் ஒரு மினி துறைமுகம் அமைப்பதற்கு தமிழக அரசு உதவ வேண்டும். போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் நிறைவேற்றி தந்து தொண்டி பகுதி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி விட வேண்டும் என்று தமுமுக சார்பில் கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



