தென்தாமரைகுளம், ஆக. 28:
முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், வசந்த் அண்ட் கோ நிறுவனருமான எச். வசந்தகுமாரின் 6-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வி வசந்தகுமார், மகன் விஜய் வசந்த் எம்.பி., மகள் தங்கமலர் ஜெகநாத், மகன் வினோத்குமார், மைத்துனர் எம்.எஸ். காமராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மேலும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ், நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் தலைவர் சிவபிரபு, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மாமன்ற உறுப்பினர்கள் நவீன்குமார், அனுஷா பிரைட், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து வசந்தகுமாரின் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அவரது நினைவு தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



