புதுக்கடை , ஜூன் 30 –
புதுக்கடை அருகே முஞ்சிறை அரசு மாதிரி மேல்நிலை பள்ளி வளாகத்தில் காலை வழிபாட்டு கூட்டம் நடைபெறும் இடத்தில் மாணவ மாணவிகள் நலன்கருதி அலங்கார கற்கள் தரை அமைக்க வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பள்ளியில் காலை வழிபாட்டு கூட்டம் நடைபெறும் இடத்தில் மாணவ மாணவிகள் நலன்கருதி அலங்கார கற்கள் அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூபாய் 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அலங்கார கற்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததையடுத்து அலங்கார கற்கள் அமைக்கப்பட்ட பள்ளி வளாகத்தை மாணவ மாணவிகள் மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஜூன் 27 அன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முஞ்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெகுபதி, முஞ்சிறை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார், முன்னாள் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பால்ராஜ், புதுக்கடை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏசுராஜ், நிர்வாகிகள் ராஜம், ஜெஸ்டஸ், முருகன், பிரிங்கோ ஸ்டான்லி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.