ஈரோடு, செப். 12 –
ஈரோடு மாவட்டம், சித்தோடு நல்லாகவுண்டம்பாளையத்தில் உள்ள ஈரோடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் சார்பில் சுமார் ரூ. 23 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் மையத்தை மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி. சதீஷ்குமார் திறந்து வைத்தார். இந்த குழந்தைகள் மையம், அப்பகுதியில் உள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழாவின் போது மில்கி மிஸ்ட் தலைவர் சதீஷ்குமார், குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் வரும் காலங்களில் இது போன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குழந்தைகள் மையம் மற்றும் பள்ளிகளுக்கான தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்யப்போவதாகவும் கூறினார்.
இந்நிகழ்வில் சித்தோடு பேரூராட்சி தலைவர் கண்ணகி தம்மண்ணா, துணை தலைவர் தங்கவேல் உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள், அப்பகுதியின் முக்கியப் பிரமுகர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த புதிய மையம் இதனைத் தொடர்ந்து சித்தோடு சமூக சேவை திட்டங்கள் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள பள்ளிக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்கள்.



