மார்த்தாண்டம், நவ. 5 –
தேங்காய்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் விஜின். இவர் கடந்த 12 தேதி நட்டாலம் பகுதியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் விஜினை வழி மறுத்து செயின், மோதிரம், பிரெஸ் லெட் ஆகியவற்றை மிரட்டி கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து கொடுத்த புகாரின் பெயரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் செனி தோட்டம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த நான்கு பேரை பிடித்து விசாரித்த போது, நட்டாலத்தில் வழி பறியில் ஈடுபட்ட கும்பல் என்று தெரியவந்தது. அவர்களை காவல் நிலையத்தில் கொண்டு விரிவாக விசாரணை நடத்தியபோது, அவர்கள் ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்த நிர்மல், தொழிக்கோடு பகுதியை சேர்ந்த பெண்டன் பின், நட்டாலம் பகுதியை சேர்ந்த காட்வின், கீழ ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த பிரவின் என தெரிந்தது.
இதில் நிர்மல் மீது கொலை குற்ற வழக்கு உள்ளது. பென்டன் பின் மீது பைக் திருட்டு வழக்கு உள்ளது. மேலும் இவர்கள் மீது வழி பறி வழக்கு, கேரளாவில் கொலை கொள்ளை வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளது தெரிய வந்தது.
சிறையில் இருக்கும் போது கொள்ளையடிக்க திட்டம் தீட்டி ஆசாரிபள்ளம் பகுதியில் பைக் திருடியது மற்றும் பல இடங்களில் கொள்ளையடித்ததும், அந்த பணத்தில் கொடைக்கானல் உட்பட பல பகுதிகளுக்கு ஊர் சுற்றி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது. பின்னர் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து மூன்று சவரன் நகை மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் கொள்ளை அடித்து விட்டு கேரளாவுக்கு தப்பி சென்று உல்லாசமாக இருந்து விட்டு, சில நாட்கள் கழித்து மீண்டும் இங்கு வந்து திருட்டில் ஈடுபடுவது வழக்கம்.



