தாம்பரம், மார்ச் 3 –
தாம்பரம் மாநகராட்சி பள்ளிகளில் “கற்கை நன்றே” ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தாம்பரம் — தாம்பரம் மாநகராட்சி பள்ளிகளில் தொடங்கப்பட்ட “கற்கை நன்றே” ஆங்கிலப் பேச்சுத் திறன் மேம்பாட்டு திட்டம் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
தாம்பரம் மாநகராட்சியின் வழிகாட்டுதலுடன், கிரெசென்டியா கல்வி சார்டபிள் டிரஸ்ட் அமைப்பின் செயல்பாட்டில் இந்த திட்டம் 27 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த வகுப்புகளில் 6,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெறுகின்றனர். அனுபவமிக்க பயிற்சியாளர்கள் மூலம் மாணவர்களுக்கு நடைமுறை அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த ஆங்கில பயிற்சி வகுப்பில் உரையாடல் பயிற்சி, சரியான உச்சரிப்பு, சொல்வளம் வளர்ப்பு, குழு விவாதம், மேடைப் பேச்சு தைரியம் ஆகியவை மாணவர்களுக்கு ஆங்கில ஆசிரியர்களால் கற்று கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் பேச ஆரம்பித்துள்ளனர் என்று தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
இது தொடர்பாக கிரெசென்டியா கல்வி சார்டபிள் டிரஸ்ட் நிர்வாகம் தெரிவித்ததாவது:
“மாணவர்கள் மொழித் திறன் பெற்றால் அவர்கள் எதிர்காலம் உறுதி பெறும். இந்த திட்டம் அவர்களின் நம்பிக்கையை உயர்த்தும் ஒரு மாற்றுத் தொடக்கம்.” இந்தத் திட்டம் மாணவர்களின் கல்வித் தரத்தையும், தொடர்புத் திறனையும் உயர்த்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த வாய்ப்பை வழங்கி, திட்டம் சிறப்பாக நடைபெற ஆதரவு அளித்த தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் அவர்களுக்கும், மாநகராட்சி மேயர் திருமதி வசந்தகுமாரி அவர்களுக்கும் கிரெசென்டியா கல்வி சார்டபிள் டிரஸ்ட் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.



