நாகர்கோவில், ஜூன் 9 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட மாத்தார் பகுதியில் 15 நிதிக்குழு நிதியின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் துணை சுகாதார நிலை பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதனைத்தொடர்ந்து மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடையே தெரிவிக்கையில்: குமரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாத்தூர் தொட்டிப்பாலம், ஆசியாவிலேயே மிக நீளமான ஒரு பாலம். இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்தும், பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்து கண்டுகளித்து செல்கிறார்கள். சுற்றுலாத்துறை சார்பாக மாத்தூர் தொட்டிப்பாலத்தில் ரூ.3.4 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சிதிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் பணிகள் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முக்கியமாக மாத்தூர் தொட்டிபாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று சுற்றுலா பயணிகள் தெரிவித்தார்கள். இப்பூங்காவினை நவீனப்படுத்த வேண்டும் என பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் விரும்பும் வகையில் நவீனப்படுத்தப்படும். மாத்தூர் தொட்டிப்பாலம் மட்டுமல்லாது மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சுற்றுலா தளங்களையும் நவீனப்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மாத்தூர் தொட்டிப்பாலம் செல்லும் வழியில் பாதுகாப்பின்றியும், அனுமதியின்றியும் உணவுப்பொருட்கள் விற்போரின் கடைகளை அகற்றி, அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் கடைகள் அமைப்பதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அருவிக்கரை ஊராட்சி செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு அறிவுறுத்தியதோடு, குலசேகரம் அரசு மருத்துவமனை சமையல் அறை, மகப்பேறு அறை உள்ளிட்டவைகளை திடீர் ஆய்வு மேற்கொண்டு, சமையலறையின் சுகாதார தன்மை குறித்தும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு மருத்துவமனை வளாகத்தில் பழுதடைந்த நிலையில் அனைத்து கட்டிடங்களையும் உடனடியாக அகற்றிடுமாறு மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
நடைபெற்ற ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், உதவி செயற்பொறியாளர், பொறியாளர்கள், மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



