மார்த்தாண்டம், செப். 29 –
விளவங்கோடு வட்டம் கடையால் பேரூராட்சிக்குட்பட்ட முத்தன்கரை மலைப்பகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்களை கலெக்டர் அழகுமீனா நேரில் சந்தித்தார். தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்னணு பழங்குடியினர் நல வாரிய அட்டைகள் 27 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும், வனவுரிமைச் சட்டத்தின் கீழ் தனி உரிமை பட்டா வழங்குவது தொடர்பாக பழங்குடியின மக்களால் அளிக்கப்பட்ட முறையீடுகளை ஆய்வு செய்து அவர்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பணிகளை துரிதப்படுத்தி முறையீடுகளை ஆய்வு செய்து கிராம சபா தீர்மானம் நிறைவேற்றி கோட்ட அளவிலான குழுவிற்கு அறிக்கையினை விரைவில் சமர்ப்பித்திட கிராம சபா நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் அப்பகுதி மக்களிடம் மின் இணைப்பு, குடிநீர், சாலை வசதி, குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு குறித்த கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்ட குறைபாடுகளை சரி செய்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, விளவங்கோடு வட்டாட்சியர் வயலா பாய், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



