மதுரை, ஜூலை 24 –
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் மாநகர போக்குவரத்து துணை ஆணையர் வனிதா ஆகியோரின் அறிவுரையின் பேரில் போக்குவரத்து காவல் துறையினரின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக ஆரப்பாளையம் பகுதியில் உள்ள புனிதோ பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை செல்வம் தலைமையில் கரிமேடு போக்குவரத்து சார்பு ஆய்வாளர்கள் சந்தானகுமார் மற்றும் ஆண்டவர் ஆகியோர் முன்னிலையில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடையே சிறப்புரையாற்றி பேசுகையில் பள்ளி மாணவர்கள் பேருந்து பயணத்தின் பொழுது எவ்வாறு செல்ல வேண்டும் என்பதனை பற்றியும் எவ்வாறு செல்லக்கூடாது என்பது பற்றியும் செய்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.
மேலும் பேருந்து பயணத்தின் பொழுது படிக்கட்டில் நின்று தொங்கிக்கொண்டே பயணம் செய்தால் ஏற்படக்கூடிய விபரீதம் பற்றியும் அதன் பின்னர் அவரது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை பற்றியும் உணர்வு பூர்வமாக எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி ஒழுக்கமாக கவனமுடன் செல்வோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வின் போது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள், காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.