சோழவந்தான், ஆகஸ்ட் 25 –
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மாவட்ட திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் சங்க கூட்டம் பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் மாதம் 10-ம் தேதியன்று மதுரை இணை ஆணையர் அலுவலகத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக பணி புரியும் அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் சம்பளம் வழங்க வேண்டும், நேரடி நியமன ஆட்களை 3, 1 என்ற அடிப்படையில் ஏற்கனவே பணி புரியும் பணியாளர்களை நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும், உயர் பதவி முதல் கடை நிலை ஊழியர் வரை தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், தொகுப்பூதிய பணியாளருக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளும் கோவில் வழங்கிடவும் மேலும் நிதியாண்டு வாரியாக தணிக்கை மேற்கொள்ள வேண்டும், கோவில் அருகாமையில் பணியாளர்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வின் போது நாகராஜ், பெரிய கருப்பன், முரளி, சதீஷ், குரு, முத்துக்குமார், மணிகண்டன், பெருமாள், சண்முகவேல், அர்ச்சகர் பார்த்தசாரதி, பிரியா சங்கர் மற்றும் மதுரை மாவட்ட திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சங்க உறுப்பினர்கள், சோழவந்தான், திருவேடகம், தென்கரை மேலக்கால் கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.



