மதுரை மே 2,
மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் சமீர் காசிம். இவர் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். தபால்தந்திநகர் பகுதியில் இவரது தாய்க்குச் சொந்தமான 2 ஏக்கர் விளைநிலம் உள்ளது. இந்த நிலத்தின் இரு புறங்களிலும் கால்வாய் அமைந்துள்ளது. இந்தக் கால்வாயின் குறுக்கே நீர் செல்லும் வகையில், சமீர் காசிம் தனது சொந்தச் செலவில் குழாய் பதிக்க அனுமதி கோரி, மதுரை பொதுப் பணித் துறை பாசனப்பிரிவில் விண்ணப்பித்தார். இதைப் பரிசீலித்த பொதுப் பணித் துறை பாசனப் பிரிவு உதவி ஆய்வாளர் மாயகிருஷ்ணன், நீர்ப்பாசன ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோர் இதற்கு அனுமதி வழங்க சமீர் காசிமிடம் ரூ. 5 லட்சம் லஞ்சமாகவும், இதற்கு முன்பணமாக ரூ. ஒரு லட்சமும் கேட்டனர். இதுகுறித்து அவர் மதுரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், மதுரை பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள வைகாசி இல்லத்தில் உதவிப் பொறியாளர் மாயகிருஷ்ணன், நீர்ப்பாசனத் துறை ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சமீர் காசிம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் இருவரையும் பிடித்து, பணத்தைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.



