தருமபுரி, ஜூலை 21 –
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பொய்யாப்பட்டி கிராமப் பகுதியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் தனியார் நிறுவனத்தின் சார்பில் சோலார் மின் உற்பத்தி திட்டம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏராளமான சோலார் பலகைகள் நிறுவப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
விவசாயிகளின் குற்றச்சாட்டுப்படி, சோலார் திட்ட வளாகத்தில் ஐந்து ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தொடர்ந்து அதிகளவில் நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால் சுற்றுவட்டார விவசாயக் கிணறுகள் மற்றும் பாசனக் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஏற்கனவே போதிய மழையின்றி சிரமப்படும் விவசாயிகளுக்கு மேலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பகுதியில் தென்னை, சோளம், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்தால் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, கால்நடைகளுக்கும் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் சோலார் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ளன நிலங்களுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும், ஆனால் திட்டம் செயல்படுத்தப்படும் போது விவசாயிகளின் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகம் நிலத்தடி நீர் வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஆழ்துளைக்கிணறுகள் சட்ட விதிமுறைகளின் படி அமைக்கப்பட்டுள்ளனவா, அவற்றின் மூலம் எவ்வளவு அளவு நீர் எடுக்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளின் வாழ்வாதார பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொய்யாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



