புதுக்கடை, மார்ச் 30 –
முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பைங்குளம், முஞ்சிறை, விளாத்துறை, மெதுகும்மல் உட்பட 11 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளின் பணியாளர்கள், சுய உதவி குழுக்கள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக பைக் பேரணி இன்று நடைபெற்றது.
கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் அழகுமீனா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் பைக்கில் வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி பதாகைகள் அமைக்கப்பட்டது. பேரணி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறைவு பெற்றது. அங்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ராஜகுமார், சாந்தி, திட்ட இயக்குனர் மைக்கேல் ஆண்டனி, கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் தலைவர் குமரேசதாஸ், செயலாளர் ராஜகுமார், பொருளாளர் முருகன், துணைத் தலைவர் சந்தோஷ்குமார், இணைச் செயலர் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



