தருமபுரி, ஆக.26:
தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையைத் தடுக்க காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பாலக்கோடு பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த பீடா கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர் மீது காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டதுடன், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் கடை செயல்பட தடை விதிக்கப்பட்டது.
பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில், அந்தக் கடைக்கு 30 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டதுடன், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதேபோல், பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், பஞ்சப்பள்ளி மூன்று ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த மளிகைக் கடையிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
அந்தக் கடைக்கு 14 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டதுடன், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் மூலம் பாலக்கோடு மற்றும் பஞ்சப்பள்ளி பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 2 கடைகளுக்கு மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



