களியக்காவிளை, ஜூலை 17 –
படந்தாலுமூட்டில் சிந்தார்மணி நாட்டு வைத்திய சங்கமம், 22-வது குரு பூர்ணிமா விழாவில் சித்தர்கள் திரு உருவ படத்திற்கு புஷ்பாஞ்சலி நடத்திய நிகழ்ச்சியில் ஏராளமான குரு பண்டிதன்மார்கள் பங்கேற்றனர்.
படந்தாலுமூடு அனுக்கிரக சித்த வர்ம வைத்தியசாலை மற்றும் பாறசாலை தேவதாசன் வைத்தியர் சித்த வர்ம ரிசர்ச் பவுண்டேஷன் இணைந்து நடத்திய சிந்தார் மணி நாட்டு வைத்திய சங்கமம் 2025 மற்றும் 22-வது குரு பூர்ணிமா விழா படந்தாலுமூடு பூர்ண ஜோதி செண்டரில் நடந்தது. நிகழ்ச்சியின் துவக்கமாக சமாதியான சித்தர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மூலிகை கண்காட்சி, இலவச மருத்துவ முகாம் நடந்தது.
விழாவில் மெதுகும்மல் கிராம ஊராட்சி முன்னாள் தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். தேசிய பாரம்பரிய சித்தவர்ம வைத்தியர்கள் சங்க தலைவர் ராமச்சந்திரன் ஆசான், பதஞ்சலி அசோசியேஷன் செயலாளர் ரிச்சாட்டு குருக்கள், வர்ம அறிவியல் மா மேதை மருத்துவர் ராஜேந்திரன், சி.டி.சி இயக்குனர் மோகன் நாயர், மேக்கோடு ஆசான் ஹரிஷ் உள்ளிட்டோர் பேசினர்.
தமிழ்நாடு பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சார்ந்த ஏராளமான சித்த வைத்தியர்கள் பங்கேற்றனர். விழாவில் களரி, யோகா, சிலம்பம் விளையாட்டு நடந்தது. தொடர்ந்து ஆசான்மார்களுக்கு சான்றிதழ்கள், விருதுகள், வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை படந்தாலுமூடு அனுக்கிரக சித்த வைத்திய சாலை நிறுவன தலைவர் சுரேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



