காத்மாண்டு: ஆக.28.
நேபாளத்தை ஒட்டிய திபெத் பகுதியில் அணை ஒன்று உடைந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அந்நாட்டில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நேபாள காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திபெத் பகுதியில் அணை உடைந்ததாக தகவல் கிடைத்துள்ளதால், ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களில் உள்ளவர்களுக்கும் தகவல் தெரிவித்து, ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேற தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
3 ஆறுகளுக்கு அவசர எச்சரிக்கை
நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையமும் போட்டே கோஷி, திரிசூலி மற்றும் நாராயணி ஆறுகளின் கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயர்ந்து கீழ்ப்பகுதிகளில் மீண்டும் பேரழிவு வெள்ளம் ஏற்படக்கூடும் என்பதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வெள்ளத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மீட்பு உபகரணங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
வெள்ள அபாயம் அதிகரித்துள்ள நிலையில், நுவாகோட் மாவட்டத் தலைமையகமான பிதுர் மற்றும் திரிசூலி பஜார் பகுதிகளில் ஏற்கனவே சேதமடைந்த இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த புல்டோசர்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், நேபாள–சீன எல்லைப் பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் ஆற்றங்கரையோர சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழலில் உயிரிழப்புகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீண்டும் பேரழிவு ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்
ரசுவா, நுவாகோட், தடிங், கோர்கா, சித்வான் மற்றும் நவல்பாராசி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்களும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினரும் தேவைப்பட்டால் உடனடியாக வெளியேற தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட மிகப்பெரிய பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 470-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பேரழிவின் தாக்கத்தில் இருந்து நேபாளம் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ஆற்றங்கரைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், ஆற்றுப்பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் ஆபத்தான சாலைகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



