திண்டுக்கல், ஜுலை 14 –
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள மெட்டூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ ஜம்புதுரை அம்மன் கோவில் வருஷாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு புண்ணிய நதியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் தாரை தப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பிரம்மாண்ட யாகசாலையில் வைக்கப்பட்டு சீனிவாச சர்மா சுவாமிகள் தலைமையில் சிவாச்சாரியர் சுரேஷ்பவுன் குழுவினரின் சிறப்பு யாகவேள்வி பூஜைகள் நடைபெற்றது.
இதனையடுத்து வேதமந்திரங்கள் முழங்க ஜம்புதுரை அம்மனுக்கு புனிதநீர், இளநீர், பால், நெய், தேன் உட்பட 21 வகையான சிறப்பு அபிஷே ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஜம்புதுரை அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் மெட்டூர் கிராம மக்கள் உட்பட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஜம்புதுரை அம்மன் மக்கள் நல அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் பிச்சை, செயலாளர் ஐயப்பன், பொருளாளர் குணசேகரன் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.