நாகர்கோவில், ஜூலை 20 –
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூத ரெட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வடசேரி பேருந்து நிலையத்தில் மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.8.95 கோடி மதிப்பில் சந்தை கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டனர்.
தொடர்ந்து வடசேரி ஆம்னி பேருந்து நிலையம், ஒழுகினசேரி பகுதி, அண்ணா பேருந்து நிலையம் போன்றவற்றையும் ஆய்வு மேற்கொண்டதோடு, பயணிகளின் வசதிகள் குறித்து, பேருந்து நிறுத்துமிடங்களையும் பார்வையிட்டனர்.
தொடர்ந்து வலம்புரிவிளை குப்பை கிடங்கு நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவங்கள், உணவகங்கள் உள்ளிட்டவைகளில் ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வலம்புரிவிளை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்குள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்ய துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினை பேணிகாத்திட மாநகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர்.
மேலும் கோணம் அறிவு சார்ந்த மையத்தினை நேரில் பார்வையிட்டார்கள். அங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, இப்பணிகளை ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினர்.
நடைபெற்ற ஆய்வில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ர.மோனிகா, செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள், துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



