நாகர்கோவில், அக். 9 –
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் சீரமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை பயன்பாட்டிற்கு வருவது எப்போது? கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்
கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் அருகில் மாற்றுத்திறனாளி கழிப்பறைகள் மற்றும் ஆண் பெண் பொது கழிப்பறைகள் பழுது அடைந்து விபத்துகள் ஏற்படும் நிலையில் சுகாதாரமின்றி காணப்பட்டது. இது பற்றிய செய்தி தினதமிழ் நாளிதழில் வெளியானது. செய்தி அறிந்த கலெக்டர் அழகுமீனா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கழிப்பறைகளை உடனே சரி செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து அந்த அதிகாரிகள் பழுதடைந்து காணப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆண் பெண் பொது கழிப்பிடத்தை சீரமைத்து வழிகாட்டி பலகைகள் வைத்து வர்ணம் பூசி புது பொலிவுடன் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தனர். இந்நிலையில் ஒரு மாதம் மேல் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் பல்வேறு தேவைகளுக்காக கலெக்டர் அலுவலகம் வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சீரமைக்கப்பட்ட கழிப்பறைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.



