நாகர்கோவில், அக். 2 –
கன்னியாகுமரி மாவட்ட கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில், காந்தியடிகளின் 157-ஆவது பிறந்தநாளையொட்டி நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் வணிக வளாகத்தில் அமைந்துள்ள கதர் கிராம அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை கலெக்டர் அழகு மீனா இன்று துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் நாகர்கோவில், குளச்சல், மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் கதர் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அண்ணல் காந்தியடிகளின் 157-வது ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இராணிதோட்டம், விவேகானந்தபுரம், படந்தாலுமூடு, திருவட்டார், திங்கள்சந்தை மற்றும் ஊராட்சி ஒன்றியம் அகஸ்தீஸ்வரம், தோவாளை, இராஜாக்கமங்கலம், குருந்தங்கோடு, கல்குளம், திருவட்டார், மேல்புறம் முஞ்சிறை, கிள்ளியூர் ஆகிய இடங்களில் 03.10.2025 முதல் தீபாவளி முடியும் வரை தற்காலிக விற்பனை நிலையங்கள் செயல்படும்.
அரசு துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் அரசுத் துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தீபாவளி வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடிகள் செயல்படும். இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கதர் விற்பனைக்குறியீடாக ரூ.4 கோடியாகும். இக்குறியீட்டினை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் இத்தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க கதர் துணிகளை வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண்ஜெகத் பிரைட், மண்டல தலைவர் ஜவஹர், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.



