நாகர்கோவில், மார்ச் 2 –
நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் தனபாலன் மகன் விஷால் (21). சட்டப் படிப்பு படித்து வந்தார். கடந்த 21ம் தேதி இரவு நாகர்கோவில் இருந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, இறச்சகுளம் பகுதியில் வைத்து முதியவர் ஒருவர் சாலையில் குறுக்கே பாய்ந்தார்.
முதியோர் மீது பைக் மோதாமல் இருக்க விஷால் பைக்கை திருப்பியபோது, பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சுயநினைவு இழந்த அவரை உடனடியாக சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் உடல் நிலை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் விஷாலுக்கு மூளை சாவு ஏற்பட்டது தெரிய வந்தது. அதை சரி செய்ய மேற்கொண்ட அனைத்து சிகிச்சை முறைகளும் தோல்வியில் முடிந்தன. இதை குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனதை கல்லாக்கி கொண்ட பெற்றோர் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தனர். அதன்படி நேற்று உடல் உறுப்புகள் தானமாக எடுப்பதற்கான அறுவை சிகிச்சைகள் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் நடத்தினர். இதை அடுத்து அவரது கல்லீரல், இரு சிறுநீரகம், கருவிழிகள் மற்றும் தோல் தானமாக எடுக்கப்பட்டு, பின் உடல் குடும்பத்தார் வசம் ஒப்படைக்கப்பட்டது. விஷால் உடலுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் லியோ டேவிட், டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவ மாணவிகள் மரியாதை செலுத்தினர்.



